எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Friday, August 7, 2009

ராம என்ற இரண்டெழுத்தின் மகிமை!

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமவென்றிரண்டெழுத்தினால்.

இந்தப் பாடலில் ராம என்ற இரண்டெழுத்தின் மகிமை பற்றிக் கூறி உள்ளது. ராம என்ற இரண்டெழுத்தை ஜபித்து வந்தால் நன்மையும், செல்வமும் தருவதோடு மட்டுமல்லாமல், நம் பாவங்களும் தொலையும் என்றும், மறு ஜென்மம், அதனால் மரணம் என்றெல்லாம் இல்லாமல் முக்தியை அடைவோம் இந்த இம்மையிலேயே என்றும் சொல்லுகின்றது. இத்தனைக்கும் ராமாயணம் எழுதியது என்னமோ ஒரு கொள்ளைக்காரர் தான். ராமாயணத்திலேயே இந்த ராம என்ற இரண்டெழுத்தின் வல்லமை பற்றி அநேக இடங்களில் சான்றுகள் கூறி உள்ளார் வால்மீகி. அவ்வளவு ஏன்? வால்மீகி இந்தக் காவியத்தை எழுதுமளவுக்கு புலமை பெற்றதே “ராம” என்ற இரண்டெழுத்தை ஜபித்துத் தவம் செய்ததால் அல்லவோ?

ரத்னாகர் என்னும் கொள்ளைக்காரன் தன் குடும்பத்தையே கொள்ளை மூலம் காத்து வந்தான். ஒரு சமயம் சப்தரிஷிகளும் கானகத்தின் வழியே பிரயாணப் படும் போது அவர்களையும் தன்னியல்புப் படி கொள்ளை அடிக்க முயல, அவர்களோ அவனுக்குப் புத்திமதி சொல்லித் திருத்த முயன்றனர். இந்தக் கொள்ளை அடிப்பதால் வரும் பாவமூட்டையை அவன் ஒருவனே சுமக்கவேண்டும் எனவும், அவன் குடும்பம் இதற்கு ஒத்துழைக்காது எனவும் புரிய வைத்தனர். அவனுக்கும் புரிந்துபோனது. “ராம” நாமத்தை உபதேசித்தனர் சப்தரிஷிகளும் அந்தக் கொள்ளைக்காரனுக்கு. இதை உச்சரித்தபடியே தவம் செய்யச் சொன்னார்கள். அவனும் விடாமுயற்சியுடன் ராம நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க மெய்ம்மறந்து, தன்னை மறந்து, பசி, தாகம் என்ற எந்த உணர்வும் இல்லாமல் தவம் செய்ய ஆரம்பித்துவிட்டான். அவனைச் சுற்றி மண் மூடிப் புற்றாக மாறியது. உயரமாய்ப் புற்று வளர்ந்தும் விட்டது. என்றாலும் அவன் விடாமல் ராம நாமத்தை ஜபித்து வந்தான்.

திரும்பிச் சென்ற சப்தரிஷிகள் கானகத்தைக் கடக்கும்போது ரத்னாகரின் நினைவு வந்து அவனை அழைத்தனர். ராம நாம உச்சரிப்பும் அவர்களைக் கவர்ந்தது. ரத்னாகரை அழைக்க அவனோ புற்றிலிருந்து வெளிப்பட சப்தரிஷிகள் மனம் மகிழ்ந்து அவனை வால்மீகி என அழைத்தனர். அவனால் ஒரு பெரிய காரியம் நடக்க இருப்பதையும் குறிப்பால் உணர்த்திச் சென்றனர். வால்மீகியும் ராமாயணத்தைப் படைக்கும் திறனைப் பெற்றார். இது எதனால் நடந்தது? ராம நாமத்தை உச்சரித்ததால் அன்றோ? அதுவும் ராமர் இருக்கும்போதே ராமாயணத்தை அரங்கேற்றமும் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது வால்மீகி ஒருவருக்குத் தான்.

இத்தகைய மனிதருள் மாணிக்கம் ஆன ராமனைப் பற்றி மஹா பாரதம் என்ன சொல்கிறது? உத்தராயனம் வருவதை எதிர்நோக்கி. பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார் . அப்போது அரசனுக்குரிய தர்மங்களைப் பற்றி யுதிஷ்டிரனுக்கு எடுத்துக் கூறுகின்றார். அப்போது பிறந்ததே விஷ்ணு சஹஸ்ரநாமம். இந்த நாமாவளிகளிலேயே, “ராம” நாமத்தை மட்டும் உயர்வாய்க் கூறுகின்றார். தர்மங்களில் சிறந்தது நாமங்களை உச்சரித்தலே என்று சொல்லும் பீஷ்மர், அதிலும் “ராம” என்னும் இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்தல் அதனிலும் உயர்வானது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார் கீழ்க்கண்ட ஸ்லோகம் மூலமாக/

“ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே!
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராநனே!!” என்று சொல்லுகின்றார். மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் அந்த வேளையிலும், “ராம” நாமத்தை உச்சரிப்பதைப் பற்றிக் கூறி, அதுவே அனைத்திலும் சிறந்த உயர்வான ஒன்று என்றும் கூறுகின்றார்.

No comments:

Post a Comment